Skip to main content

அரசுப் பள்ளியா இது? - பெற்றோர்களின் செயலால் கண் கலங்கிய அமைச்சர்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Minister Meiyanathan was amazed see the work head master principal  renovated  government school

 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான் இன்று அரசு மற்றும் தனியாரில் உயர் பதவிகளிலும் ஆளும் இடங்களிலும் உள்ளனர். அதனால் மேலும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வசதிகளுடனும் பெற்றோர்கள், மாணவர்கள் விரும்பும் முன்மாதிரிப் பள்ளியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பெற்றோர்கள், கல்வி கொடையாளர்களின் உதவியோடு அரசு உதவிகளையும் பெற்று இன்று தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசுப் பள்ளியாக மாற்றி அமைத்திருக்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

 

இந்தப் பள்ளியைப் பார்க்கும் அரசுப் பள்ளிகளின் மீது பற்றுள்ளவர்கள் தங்கள் ஊரில் தாங்கள் படித்த பள்ளியையும் இப்படி மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஒரு பள்ளி 8 மாதங்களில் மாற்றம் கண்டு புதுப்பொலிவு பெற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

திருவரங்குளம் ஒன்றியம், வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு மே 8ஆம் தேதி நடந்த ஆண்டு விழா மற்றும் கல்வி சீர் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, அப்போதைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.

 

ad

 

நிகழ்ச்சியில் பேசிய மாணவி லக்சயா, எங்கள் பள்ளியின் தரம் உயர அமைச்சர் உதவிகள் செய்யணும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து பேச வந்த அமைச்சர் உடனடியாக ரூ.35 ஆயிரம் பணத்தை கோரிக்கை வைத்த மாணவி கையில் கொடுத்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் போர்டு வாங்கி வைக்கச் சொன்னார்.  அமைச்சரின் முதல் நிதியோடு பெற்றோர்கள் பச்சலூர் பள்ளிக்குச் சென்று பள்ளியைப் பார்த்து வியந்து நின்ற போது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி வந்த விருந்தாளிகளுக்கு மதிய விருந்து படைத்ததோடு புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி வளர்ச்சிக்காக எங்கள் பங்களிப்பு என்று ரூ.35 ஆயிரம் காசோலையை கொடுத்து மேலும் வியப்படையச் செய்தார்.

 

இந்த தொகைகளோடு அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் அக்கரைமும் ஆர்வமும் கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் கொடையாளர்களின் உதவியும் கிடைக்க மேலும் பல கட்டமைப்பிற்கு அமைச்சரும் அரசு திட்டங்களை பெற்றுத் தர உள்ளூர் இளைஞர்கள், பெற்றோர்கள், முனனாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பையும் செலுத்து இரவு பகலாக உடல் உழைப்பையும் கொடுத்தனர்.

 

இந்தத் தொகைகளோடு அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் கொடையாளர்களின் உதவியும் கிடைக்க, மேலும் பல கட்டமைப்பிற்கு அமைச்சரும் அரசுத் திட்டங்களைப் பெற்றுத் தர உள்ளூர் இளைஞர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பையும் செலுத்தி இரவு பகலாக உடல் உழைப்பையும் கொடுத்தனர்.

 

சரியாக 8 மாதங்களில் பழைய வகுப்பறைக் கட்டடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு ஃபால் சீலிங், புதிய மின்விசிறிகள், ஸ்மார்ட் ரூம், சுவர்களில் வண்ண ஓவியங்கள், பேவர் பிளாக் தரைத் தளம், பிரமாண்ட கலையரங்கம், சுற்றுச்சுவர், நவீன கழிவறைகள், குடிதண்ணீர் வசதி என ரூ.25 லட்சம் செலவில் புதுப்பொலிவு பெற்று 2023 ஜனவரி 7ந் தேதி அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவின்போது ஸ்மார்ட் ரூமில் வைத்து 8 மாதங்களில் எப்படி பள்ளி புதுப் பொலிவு பெற்றது என்பதை 5 நிமிட வீடியோவாகப் பதிவு செய்திருந்ததை ஓட விட அத்தனை பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அமைச்சர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தென்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் அமைச்சர் போட்ட விதை இன்று விருட்சமாக வளர்ந்திருப்பதாகக் கூறினார்கள். 

 

தொடர்ந்து பேசிய சின்னத்துரை எம்எல்ஏ, “கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியைப் பார்த்து மற்ற பகுதிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். 8 மாதங்களுக்கு முன்பு பார்த்த பள்ளி இன்று எப்படி இருக்கிறது என்பதைக் காண வந்தேன். அமைச்சர் கொடுத்த நிதி எப்படியெல்லாம் மாறி இருக்கிறது. அத்தனையும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிதானா இது என்று வியப்பாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களின் முழு உழைப்பும் தன்னார்வலர்களின் தன்னலமற்ற உதவியும் இன்று இந்த வியப்பைக் கொடுத்திருக்கிறது. எங்கள் தொகுதியிலும் இப்படியான பள்ளிகளை உருவாக்குவோம் என்றார்.

 

அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, “பள்ளி ஆண்டு விழாக்களுக்கு அழைப்பார்கள் போவோம் பேசுவோம் வருவோம். அப்படித்தான் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன். மாணவியை வைத்து ஸ்மார்ட் போர்டுக்காக கோரிக்கை வைத்தார்கள். சிறு தொகையைக் கொடுத்தேன். அந்த சிறு தொகையை வைத்து இன்று இத்தனை லட்சங்களை பெற்று பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியரின் வழிகாட்டலோடு மற்றுமொரு முன்மாதிரி அரசுப் பள்ளியை உருவாக்கி உள்ளார்கள். 5 நிமிடம் ஓடிய ஆவணப் படத்தைப் பார்த்தபோது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. எப்படி இருந்த பள்ளி இப்படி பொலிவு பெற்றுள்ளது. இது போல ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மாற வேண்டும். அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைய செய்து கொண்டிருக்கிறார். மேலும் பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும். புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி மாற்றங்களைக் காண 8 மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இன்னும் நிறைய பள்ளிகள் மாற நான் முழுமையாகத் துணையாக இருப்பேன்” என்றார்.

 

விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கானோரும் பள்ளியை வியப்பாகப் பார்த்தனர். வண்ணங்களாலும் வண்ண விளக்குகளாலும் மட்டும் பள்ளி அலங்கரிக்கப்படவில்லை அறிவை புகட்டும் அத்தனை நவீன வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளது இந்த புதுமைப் பள்ளியில். இந்த பள்ளியைக் காண இனி ஏராளமானோர் வருவார்கள். இந்தப் புதுமைப் பள்ளி மாணவர்களை வைரமாகப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க வேண்டிய கடமையும் உரிமையும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.