Skip to main content

அதிமுக ஆட்சியில் நகைக்கடன் வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு: அமைச்சர் பெரியசாமி அதிரடி! 

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

admk government gold loan minister i periyasamy pressmeet at salem

 

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கியதில் 500 கோடி ரூபாய்வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

 

சேலம் மாவட்டக் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29.07.2021) நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார்.

 

விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர், பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

 

இதையடுத்து அமைச்சர் ஐ. பெரியசாமி ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழக கூட்டுறவுத்துறையில் நடப்பு ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்குப் பயிர்க்கடனை உரிய நேரத்தில் வழங்குவதோடு, உரம் வழங்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம். 

 

ரேஷன் கடைகளில் 3,997 விற்பனையாளர், எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இப்பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும். 

 

மாநிலம் முழுவதும் உள்ள 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த பல்வேறு புகார்களின்பேரில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. பயிர்க்கடன் வழங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தரிசு நிலத்தில் வாழை, தென்னை, மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருப்பதாகவும், எதுவும் பயிரிடப்படாத தரிசு நிலத்திற்கும் பயிர்க்கடன் வழங்கியதாக முறைகேடுகள் நடந்துள்ளன. 

 

கடன் வழங்கும் நிபந்தனைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதில், எத்தனை பேருக்கு, எத்தனை கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்துவருகிறோம். மேலும், 5 பவுன்வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதையும் ஆய்வுக்குட்படுத்தியதில், முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

மத்திய கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ பணம் இல்லை. ஆனால் நகைக்கடன் கொடுக்கப்பட்டதாக கணக்கு இருக்கிறது. அதாவது நகையை அடகு வைத்து, வைப்பு நிதியாக கணக்கில் கொண்டுவந்துள்ளனர். 11 சதவீத வட்டிக்கு நகையை அடகு வைத்து, 7 சதவீத வட்டி பெறும் வகையில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

 

பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் அதிகளவில் மாற்றப்பட்டதாக வந்த புகார் குறித்து ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறை விசாரணையில் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 18 வயது நிரம்பிய மாணவர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்." இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.