Skip to main content

"மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்பது தவறான தகவல்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

minister anbil mahesh poyyamozhi surprise visit in kulithalai school 

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, வட்டாரக் கல்வி அலுவலர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தது குறித்த விவரங்கள், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பள்ளிகளிலும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மற்றும் ‘இல்லம் தேடி கல்வி’ ஆகிய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறதா? என்பன குறித்தும், மாணவர்களின் கற்கும் திறன், வருகைப்பதிவு, இடைநிற்றல் ஆகியன குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உடனிருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து  135 ஆண்டுகள் பழமை வாய்ந்த  குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியரின் கற்பித்தல் குறித்தும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உள்ளார்களா, பள்ளி அடிப்படை வசதி குறித்தும், கட்டடங்களின் தன்மையைக் குறித்தும் கேட்டறிந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூணினை நேரில் பார்வையிட்டார்.

 

அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழக பள்ளிக்கல்வித் துறையானது மிகப்பெரிய துறையாகும். இந்த துறையின் அமைச்சராகிய நான் பள்ளிகளில் 77 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.  அரசு பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம். குளித்தலை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வருகைப்பதிவேடு மற்றும் அவர்களின் ஆய்வுப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

தமிழக முதல்வர் துவக்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டத்தினை நானும் துறைசார்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மாணவர்கள் அடிப்படை தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சரியான முறையில் கற்று, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டுமென தமிழக முதல்வரின் கனவை நினைவாக்கும் வகையில் அதிகாரிகள் தங்களது அர்ப்பணிப்பான உழைப்பினை வழங்கி வருகின்றனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை அரசின் கண்ணும் கருத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

 

நான் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கூட்டத்தொடரிலோ ஒவ்வொரு எம்எல்ஏக்கும் எனது ஆய்வறிக்கையினை அளிக்க உள்ளேன். இதுவரை 34 தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தற்போது 35வது தொகுதியாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முதன்முதலில் வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்எல்ஏக்களின் அனுமதியுடன் தான் அந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

 

அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாத இந்த துறையில் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் அவர்கள் திறன்மிக்கவர்களாக, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்பது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் உரிய வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடையே கூட்டங்கள் மற்றும் நாடகங்கள், கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.