Skip to main content

தந்தையைக் கொன்ற மகன்! ஆம்புலன்ஸ் டிரைவரால் வெளிவந்த உண்மை!  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Mentally ill son addicted to alcohol who killed his father!

 

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்த நேரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் உயிரிழந்துவிட்டார். சுப்பிரமணியினுக்கு மகன், மகள் மற்றும் இரட்டை மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 மகன், ஒரு மகள் என 3 பேருக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில், இரட்டை மகன்களில் ஒருவரான கார்த்தி மட்டும் சுப்பிரமணியனுடன் வீட்டில் இருந்துள்ளார். 32 வயதான பொறியியல் பட்டதாரியான இவர் எம்.பி.ஏ  முடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர், தினந்தோறும் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் எங்கும் வேலைக்குச் செல்லாத இவர், தந்தையின் வருமானத்தை நம்பியே வாழ்ந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று (18.10.2021) காலை இவரது வீட்டில் தந்தை சுப்பிரமணியன் எழுப்பிய சப்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் கார்த்தி அரசு மருத்துவமனை அருகில் சென்று அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஃப்ரீசர் பாக்ஸை ஆம்புலன்ஸில் வைத்து கார்த்தியை பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, கண்ணாடியால் கிழிக்கப்பட்டு சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு கார்த்தி வசித்த அறைக்குச் சென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவில் படுக்கையைப் போட்டு கார்த்தி படுத்திருந்தார். மேலும், நூற்றுக்கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கே கிடந்துள்ளன. 

 

Mentally ill son addicted to alcohol

 

பல மாதங்களாக அவர் கடையிலிருந்து வாங்கிவந்து சாப்பிட்ட உணவு பொட்டலங்களைக் கூட வீட்டை விட்டு வெளியில் போடாமல் அங்கேயே வைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு கார்த்தியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், அவரை வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  

 

Mentally ill son addicted to alcohol

 

தாய் இறந்தது முதல் வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையான கார்த்தி, தினமும் தந்தையிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தகராறு செய்துவந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், நேற்றும் மதுவுக்குப் பணம் கேட்டு அதைக் கொடுக்க மறுத்த தந்தையைக் கார்த்திக் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். 

 

மன நோயாளியான பொறியியல் பட்டதாரி மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.