Skip to main content

ஒன்றியக் குழு கூட்டத்தின் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

member dharna union committee meeting

 

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக் குழு கூட்டம் குழு தலைவர் செல்வி தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

அப்போது திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒன்றிய நிர்வாகத்தில் முறையான வரவு செலவு கணக்குகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, ஒன்றிய பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து கவுன்சிலர்களான எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளான எங்களை ஒன்றிய நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்றிய நிர்வாகம் என்று குற்றம் சாட்டினார்கள். 

 

இந்த கூட்டத்தில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து உள்ளாட்சி நிர்வாகம் சரியாக செயல்பட முடியவில்லை என குற்றம் சாட்டினார். கவுன்சிலர்களின் சரமாரியான குற்றச்சாட்டுகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த சுயேச்சை கவுன்சிலர் சிவகுமார் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அதிகாரிகள் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

 

இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர் சிவகுமார் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைவதாக கூறிவிட்டு உறுப்பினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.