Skip to main content

கரோனாவில் சிறுவன் இறப்பு!!! அலுவலர்களே உறவுகளாய் நின்று அடக்கம் செய்தோம்... சுகாதார மேற்பார்வையாளரின் உருக்கம்..

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
The melting of a health supervisor

 

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் சிலர் மரணத்தை தழுவியுள்ளனர். இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் கொடுத்தால் மேலும் தொற்று பரவும் என்பதால், அரசு அலுவலர்களே ஆழக்குழி தோண்டி அதில் கிருமி நாசினி தெளித்து அடக்கம் செய்து வருகிறார்கள். தூரமாய் நின்று உறவினர்கள் கண்ணீர் வடித்துச் செல்லத்தான் முடியும். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், சுகாதார வருவாய் அலுவலர்கள், காவல் துறையினர் இணைந்து அடக்கம் செய்துள்ளதை கந்தர்வகோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் தனது முகநூலில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்..

அவரது பதிவு,

கந்தர்வக்கோட்டை சுகாதாரத்துறை சார்பாக 27/06/20 அன்று  நள்ளிரவு  ஒரு மணிக்கு, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு அலைபேசி தகவல், "தங்கள் பகுதியை சார்ந்த 13 வயது சிறுவன் கரோனா தொற்றினால் இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை உறவினர் வசம் ஒப்படைக்க இயலாது சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய நீங்களும், வட்டாட்சியர் இருவரும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று தகவல் வர, அத்தகவலை அப்போதே  துணை இயக்குநர் கலைவாணி (சுகாதாரப் பணிகள்- அறந்தாங்கி) அவர்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக  அவர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விடிந்தும் விடியாத பொழுதில் சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவரை அணுகி மருத்துவ முறைப்படி, பத்தடி ஆழத்தில் குழிதோண்டி புதைக்க ஏற்பாடுகள் செய்த நிலையில் எதற்காக இந்தக் குழி என்று தெரிந்ததும் குழிதோண்டிய JCB இயக்குநர் பாதியில் ஓடிவிட உடன் எங்களுடன் வந்த பணியாளர்களையும், கிராமத்து இளைஞர்கள் சிலரையும் கொண்டு குழிதோண்டி, ஒரு அடிக்கு ப்ளீச்சிங் பவுடர்  நிரப்பிய பின்னர்,  மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய நான், அப்பகுதி சுகாதார ஆய்வாளர் ஆகிய நால்வர் முன்னிலையில்,  உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பகட்டுவான்பட்டி மயானம் வந்தபோது, உடலை அடக்கம் செய்ய உறவுகள் யாரும் முன்வரவில்லை. அவர்களை அழைப்பது இந்த நேரத்தில் கூடாது சொந்தமாக நின்று சுகாதாரத்துறையும், காவல்துறை ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் நின்று அந்த பிஞ்சின் உடலை அடக்கம் செய்தோம் என்கிறது அந்தப் பதிவு.

உயிர் பயத்தால் உறவுகள் வராவிட்டாலும் உறவுகளாய் நின்று சிறுவனின் உடலை அடக்கம் செய்த சுகாதார, வருவாய், காவல் துறை, ஊராட்சி நிர்வாகத்தை கிராம மக்கள் பாராட்ட தயங்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.