Skip to main content

மருந்துகளை அதிக விலைக்கு விற்பதற்காக குறுக்கு வழியைக் கையாளும் மருந்து நிறுவனங்கள்!- உயர்நீதிமன்றம் வேதனை!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

மருந்துப் பொருட்களை அதிகவிலைக்கு விற்பனை செய்வதற்காக மருந்து விற்பனை நிறுவனங்கள், இளம் பெண்களையும் மருத்துவர்களுடன் அனுப்பிவைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

medicines companies doctors chennai high court


வரி செலுத்துவது தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை  எதிர்த்து மருந்து நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், சுமார் 130 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில்  தினமும் 50 மில்லியன் நோயாளிகளுக்கு 1 மில்லியன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நவீன மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்கி வருவதால், வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு,  குறிப்பாக சென்னைக்கு மருத்துவச் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். ஆனால், தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடைவது கிடையாது என்பது பெரும் குறையாக உள்ளது. 


உலகளவில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள் 33 மில்லியன் டாலர் மதிப்பில் இயங்கி வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதுபோல,  கடந்த 2017- ஆம் ஆண்டில் ரூ. 1,16,389 கோடிகளாக இருந்துள்ள மருந்து நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம், 2018- ஆம் ஆண்டில் ரூ.1,29,015 கோடிகளாக  உயர்ந்துள்ளது. ஆனால், இந்த மருந்து நிறுவனங்களின் தேவையில்லாத மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக டாக்டர்களுக்கு தங்க நகை, ரொக்கப்பணம், கிரடிட் கார்டு, இன்பச்சுற்றுலா என பல வழிகளில் லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாக ஒரு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. 

இதனால் டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதேரீதியில், எக்ஸ்ரே, இசிஜி என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் அதிகளவில் டாக்டர்களுக்கு கமிஷன் செல்கிறது. ஆனால், இவ்வாறு தொழில் நடத்தை விதிகளை மீறி டாக்டர்கள் எந்தவொரு அன்பளிப்போ அல்லது லஞ்சமோ மருந்து நிறுவனங்களிடம் பெறக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. அந்த நடத்தை விதிகள் தொடர்ந்து மீறப்பட்டே வருகின்றன. 

சிலநேரங்களில், டாக்டர்களுக்கு அவர்கள் விரும்பும் இளம்பெண்கள் கூட  மருந்து விற்பனை நிறுவனங்களால் பரிசாக அளிக்கப்படுகின்றனர். திரைமறைவில் நடந்து வரும் இந்த மருத்துவ மாபியாவால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தமட்டில், மருந்து விற்பனைக்காகப் பல வழிகளில் லட்சக்கணக்கில் செலவழித்த தொகையை, தாங்கள் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என நிறுவனம் கோருவது அதிர்ச்சிகரமாக உள்ளது. இவ்வாறு மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்வது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. 


எனவே கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்க தங்க நகை, கிரடிட் கார்டு, ரொக்கப்பணம் என பல வழிகளில் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இந்நிறுவனம்,  தங்களின் மருந்து விற்பனைக்காக மருத்துவர்களின் விருந்தோம்பலுக்காக செலவழித்ததாகக் கூறப்படும் ரூ.42,81,986 கோடி தொழில் நடத்தை விதிகளை மீறி லஞ்சமாகப் பெற்ற டாக்டர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட 12 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர், மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 20- ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.