Skip to main content

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

b

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது.

 

இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி டி-பாஃம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவி ராஜேஸ்வரி இம்மாதம் 17-ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார். திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாகப் பேசியுள்ளார். அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.

 

கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்தபோது விடுதியின் தரைப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார். மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கூறியதன் பேரில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் உயிரிழந்த மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டு, முகத்தாடையிலும், தொடைப் பகுதியிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது. இதனால் மாணவி ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதெனக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முன்  போராட்டம் நடத்த முயன்றனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருடன் பேசினர். சம்பவம் குறித்து காவல் நிலையத்தில்  முறையாகப் புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்திடுவோம் என ஐஜி கூறினார். அதன் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ராமையன், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதெனப் புகார் கூறினார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சமூகத்தின் போலி பிம்பத்தை உலுக்கிய மரணம்...' - உடல் பருமனால் சிறுமி தற்கொலை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

jkl

 

திருச்சியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு உடல் பருமனாக இருந்ததால் உடல் எடையைக் குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வந்துள்ளார். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானவர், கடந்த 24ம் தேதி மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

அக்கம்பக்கத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அச்சிறுமி தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்ட்டோன்மென்ட் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்தப் பெண் அதிக உடல் பருமன் ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் உடல் எடை குறைப்பது தொடர்பான பட்டியலை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். 

 

தற்போது இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "உடல் பருமன் தொடர்பாக ஒரு உயிர் நம்மைவிட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. அழகு மற்றும் ஆரோக்கியம் பற்றி இந்தச் சமூகம் கட்டி வைத்திருக்கும் போலி பிம்பத்தை இந்த மரணம் உலுக்கி இருக்கிறது" என்று சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளைப் பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. 

 

 

Next Story

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை... தமிழகத்தில் தொடரும் சோகம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

ரகதச

 

ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையில் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம்கூட தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் இன்று காலை சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவர், கடனைத் திருப்பி தர இயலாத காரணத்தால் தற்போது தற்கொலை முடிவெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஆன்லைன் சூாட்டத்திற்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், இந்தத்  தற்கொலை நடைபெற்றுள்ளது.