Skip to main content

மருத்துவ சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
k

 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 7.5 சதவீதம் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.