Skip to main content

இரட்டை இலையை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் காலமானார்!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Mayadevar, the first MP of AIADMK to choose a double leaf, has passed away!

 

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் டி.உச்சபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பத்தேவர்-பெருமாயி தம்பதியர்களுக்கு 1934 ம் வருடம் அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர், அதன்பின்னர் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் படித்துள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த இவர் எம்.ஏ. பி.எல் பட்டம் பெற்று சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போதே எம்.ஜி.ஆர் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.

 

1973ம் வருடம் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போது திண்டுக்கல்லில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிட்டார். அப்போது தேர்தல் சின்னத்தைத் தேர்வு செய்யும்போது இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து அதை எம்.ஜி. ஆருக்கு தெரிவித்து அதே சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றவர்.  அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. வில் இருந்தவர் ஒரு சில காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த 15 வருடங்களாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் இருந்து வந்த மாயத்தேவர் திடீரென காலமானார். இறந்துபோன மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கே.எம்.வெங்கடேசன், கே.எம்.சுமதி, கே.எம். செந்தில்குமரன் என்ற மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.

 

இவர்களில் மூத்த மகன் கே.எம்.வெங்கடேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். தற்போது மாயத்தேவர் வடக்குத் தெருவில் தேவர் சிலை அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது நல்லடக்கம் நாளை புதன்கிழமை மதியம் நடைபெறுகிறது. மறைந்து போன முன்னாள் எம்.பி.மாயத்தேவர் இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் அவர்களால் பாராட்டு பெற்றவர். அதுபோல தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்து வந்தார். தற்போது அதிமுக பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவரின் உதவியாளராக இருந்து வந்தவர். உடல்நலக்குறைவால் காலமான மாயாதேவருக்கு தொகுதி எம்எல்ஏ வும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்த அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாயத்தேவருக்கு கட்சி பாகுபாடு இன்றி இறுதி அஞ்சலி செலுத்தினர் வருகிறார்கள். இன்று எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்த வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.