Skip to main content

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்; வாதங்களை முன்வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
The matter of unwanted being carried into the Assembly High Court allowed to present arguments

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு குட்காவுடன் வந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள், ‘தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அதிகரித்துள்ளது’ எனக் குறி முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்தும், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக தெரிவித்தும் சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும் ரத்து செய்யக்கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸில் தவறுகள் இருந்தால் அதனை திருத்தி அனுப்பலாம். ஆனால் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது எனத் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உரிமைக்குழு சார்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே சமயம் இந்த நோட்டீஸை அனுப்பியதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பா அமர்வில் இன்று (25.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராஜி வாதிடுகையில், “இந்த வழக்கு தொடர்பான நோட்டீஸை பெற்றுக்கொண்டோம். எனவே தங்கள் தரப்பு  வாதங்களை எடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கு.க.செல்வம் இறந்துவிட்டதால் அவரை விடுவிக்க வேண்டும்” எனக் கேட்டுகொண்டார். இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் மறைந்த கு.க. செல்வத்தை இந்த வழக்கில் இருந்து நீக்கிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி அளித்தனர். மேலும் இந்த வழக்கு 29 ஆம் தேதிக்கு (29.07.2024) ஒத்திவைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்