Skip to main content

ஆணவக்கொலை; பெற்ற மகளைக் கொன்ற தாய்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Manslaughter; A mother issue her daughter

 

மகள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்தார் என்கிற ஆத்திரத்தில் தாயே ஆணவக் கொலை செய்திருக்கிறார். பாளை பகுதியின் சீவலப்பேரியை ஒட்டியுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ஆறுமுகக்கனி. இவர்களின் மகள் அருணா(வயது 19) கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தவர் அங்கேயே வேலையும் பார்த்து வந்திருக்கிறார். மகளின் படிப்பு, பிற தேவைகளைப் பெற்ற தாயான ஆறுமுகக்கனியே தன் சுயவேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி பெற்ற கடமையைச் செய்திருக்கிறார்.

 

இதனிடையே கோவையில் வேலை பார்த்த அருணா அங்கு வேலைப் பார்த்து வந்த பாலாமடையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்திருக்கிறார். இவர்களின் காதல் நீடித்திருக்கிறது. இந்த விஷயம் அரசல் புரசலாகத் தாய் ஆறுமுக்கனிக்கும் தெரிய வந்திருக்கிறது. அதே சமயம் வாலிபர் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தாய் கடுமையாக எதிர்த்திருக்கிறார். வேண்டாம் இந்தக் காதல் என்ற பெற்றோர், அருணாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு சம்மதிக்காத மகளோ காதலை விடுவதாகத் தெரியவில்லை. அந்த வாலிபரையே திருமணம் செய்வேன் என்று அருணா உறுதியாகத் தெரிவித்து விட்டாராம்.

 

இந்தச் சூழலில் கோவையிலிருந்த மகளை வீட்டிற்குக் கூட்டி வந்திருக்கிறார் தாய் ஆறுமுகக்கனி. அப்போது கூட  மகளிடம் எடுத்துச் சொன்னபோது தாய்க்கும் மகளுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. என் பேச்சைக் கேட்காமல் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வேன்னு பிடிவாதமாக இருக்கிறாளே என ஆத்திரத்திலிருந்த தாய் ஆறுமுகக்கனி, நேற்று முன்தினம் அருணாவை அவளது தோளில் கிடந்த துப்பட்டாவால் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவளது கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கதறக் கதற நெரித்துக் கொலை செய்திருக்கிறார். அதன் பின் மாத்திரைகள், ஹேர் டையையும் எடுத்துச் சாப்பிட்ட தாய் தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

 

தகவலறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் அருணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள் தாயைப் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்து ஒப்புக்கொண்ட தாய், தானும் அளவுக்கதிகமான மாத்திரை ஹேர்டை குடித்ததாகச் சொல்ல உடனே அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

வழக்குப்பதிவு செய்த சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற தாயே ஆணவக் கொலையில் ஈடுபட்டது பாளை பகுதியைப் பரபரப்பாக்கி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.