Skip to main content

‘மீண்டும் மஞ்சப்பை விருது’ - அரசுப் பள்ளிக்கு குவியும் பாராட்டுகள்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manjappai Award to Keeramangalam Government School

 

நெகிழி உள்ளிட்ட மக்காத பொருட்களால் நிலமும் நீரும் காற்றும் மாசடைந்து பருவநிலை மாறிக் கொண்டிக்கிறது. இதனை மாற்றியமைக்க நெகிழி பயன்பாட்டை குறைக்க 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தால் மட்டும் போதுமா, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி, தனிநபர்கள் முதல் தனியார் நிறுவனங்களை வரை முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசும் விருதும் வழங்க முடிவெடுத்த அரசு அதற்கான தேர்வுகள் நடத்தியது. இதில் ஏராளமான பள்ளிகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு 3வது பரிசு கிடைத்துள்ளது. இன்று சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடந்த விழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழாவில் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.

 

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு 3வது பரிசு மற்றும் விருது பெற்ற கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கான விருது மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, உதவி தலைமை ஆசிரியர் குகன், ஆசிரியர்கள் கொடியரசன், கண்ணன், பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி கார்த்திகா உள்பட பலர் பெற்றுக் கொண்டனர். இந்தப் பள்ளியில் பல வருடங்களாக மண்பானையில் குடிதண்ணீர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து சில்வர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடமும் மாணவர்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வியிலும் கலையில் சாதித்து வரும் பள்ளியில் நீட் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகளை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிய பள்ளி நீட்டுக்கு முன்பே பல மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை உருவாக்கி தொடர் சாதனை படைத்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தற்போது மஞ்சப்பை விழிப்புணர்விலும் விருது பெற்றுள்ளதால் பொதுமக்களும் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.