Skip to main content

தெற்கு ரெயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயப்பணி -ஊழியர் தற்கொலை -மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரிக்கை

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

Manaparai


தெற்கு ரெயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயப்பணி வழங்கப்படுவது குறித்தும், மாற்றுத்தினாளி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 


இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் அதன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம் பேசுகையில்,

கரோனா பரவல் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி தொடர்ந்து நீட்டித்தும் வருகிறது. ரயில்வே சரக்கு மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கி வருகிறது. இதற்காக அத்தியாவசியப் பணிகளில் மட்டும் குறைந்த அளவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

மார்ச் 25 மற்றும் 27 தேதிகளில் மத்திய அரசின் பர்சனல், பொதுக் குறைபாடு மற்றும் ஓய்வூதியத் துறை ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் பணியமர்த்துவது, பணிச்சூழல், இதர கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதை மேற்கோள்காட்டி  ரயில்வே துறைக்கும் இது தொடர்பாக வாரிய நிர்வாக இயக்குநர் அலோக் குமார் மார்ச் 27 ஆம் தேதி உத்தரவிட்டார்.
 

 


ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளை ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுத்தவும் இவர்களுக்கு விதிவிலக்கு என அதில் தெளிவுபடுத்தி இருந்தார். மாற்றுத்திறனாளிகள் உடல் தடுமாற்றம் தவிர்க்க இயற்கையாக கைகளைப் பல்வேறு இடங்களில் ஊன்றவோ பிடிக்கவோ செய்வார்கள். கரோனா தொற்று எளிதில் ஏற்படக்கூடும் எனக் கருதி அரசு இந்த உத்தரவை வெளியிட்டது.
 

 

kasinathan

                                                                             காசிநாதன்

இதற்கு இடையில் விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்த காசிநாதன் கடந்த மே 15 ஆம் தேதி  இரவு வீட்டில் வயர் மூலம் காசிநாதன் தூக்குப்போட்டுள்ளதும், வயர் அறுந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வெளியேறி இருந்ததும், தெரியவந்தது. அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
 

http://onelink.to/nknapp


அதில், மதுரைக்கு தன்னை அவ்வப்போது பணிக்கு அனுப்பும் நிலையில், தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் எப்படி 120 கிலோ மீட்டர் செல்ல முடியும். இதுவே இந்த முடிவுக்கான காரணம், என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் காசிநாதனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயில் 680 மாற்றுத் திறனாளிகள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். இதில் சுமார் 60 மாற்றுத் திறனாளிகள் மேற்பார்வையாளர்கள் கட்டாயத்தால் ஊரடங்கு நேரத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அப்பட்டமான மனித உரிமை மீறல் இது. மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.