![Man rescued after falling down 60 feet ditch with bike](http://image.nakkheeran.in/cdn/farfuture/r-SBw46t3-fY7MW0Bbbgt--XjtpJ8MTLJR5aZP35FDU/1697636448/sites/default/files/inline-images/a1920.jpg)
ஏற்காடு மலை அடிவாரத்தில் இருசக்கர வாகனத்துடன் 60 அடி பள்ளத்தில் விழுந்த நபரை 5 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்புப் படையினர் மீட்டனர்.
சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் ஏற்காடு செல்வதற்காக காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார். தொடர்ந்து ஏற்காடு மலை அடிவாரத்திற்கு வந்த அவர், மலைப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவர் விழுந்தபோது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் அவர் பள்ளத்தில் விழுந்தது யாருக்குமே தெரியவில்லை. 5 மணி நேரத்திற்குப் பிறகு பள்ளத்தில் இருந்து சத்தம் வருவதை அறிந்து மலைப் பாதையில் வந்தவர்கள் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவரின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.