Skip to main content

காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார்! 

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Man arrested in salem who got money from couples

 

காதல் ஜோடிகளைக் குறி வைத்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவும் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

 

சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பட்டர்ஃபிளை மேம்பாலம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், காதலனுடன் இளம்பெண் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டு இருப்பதை அலைபேசியில் பதிவு செய்துள்ளார். பின், காதலனை மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்ட மர்ம நபர், அந்தப் பெண்ணிடம், காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.  இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் (45) என்பவர்தான் சம்பவத்தன்று இளம்பெண்ணிடம் நகை, பணத்தை மிரட்டிப் பறித்துச் சென்றார் என்பது தெரியவந்தது. அவருடைய அலைபேசி பதிவுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காதலர்களுடன் இருக்கும் படங்கள், காணொளி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

 

அவரிடம் விசாரணை நடத்தியதில், காதலில் ஈடுபடும் இளம்பெண்களை குறி வைத்து அவர்களை பின்தொடர்வதும், அவர்களின் அலைபேசி எண், புகைப்படங்கள் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பதையே வேலையாக வைத்திருந்தது தெரியவந்தது. சரவணன் மீது இரும்பாலை காவல்நிலையத்திலும் இதேபோல் ஒரு புகார் பதிவாகி உள்ளது. இதையடுத்து அவரை கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 


அதேசமயம், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இருந்தால் அவர்கள், சேலம் மாநகர காவல்துறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்களுடைய பெயர், இதர விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை அறிவித்து இருந்தது. இதற்காக கொண்டலாம்பட்டி சரக உதவி ஆணையர் ஆனந்தி 9159222580, சேலம் மாநகர சமூக ஊடகப்பிரிவு உதவி ஆய்வாளர் கீதா 9498178630 ஆகியோரின் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க துணை ஆணையர் லாவண்யா தலைமையில் உதவி ஆணையர்கள் அசோகன், ஆனந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார். 

 

இது ஒருபுறம் இருக்க, ஜன. 5ம் தேதி தாதகாப்பட்டி எஸ்.வி.ஆர் நகரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அன்னதானப்பட்டி தனியார் திருமண மண்டபம் அருகே வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒன்றரை பவுன் நகையை சரவணன் பறித்துச் சென்றார் எனத் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் அயூப்கான் விசாரணை நடத்தி, சரவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மாநகரில் சரவணன் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், நான்கு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து உதவி ஆணையர்கள் ஆனந்தி, அசோகன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்