Skip to main content

கமல்ஹாசன் வருகையில் பெரும் குளறுபடி!

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

makkal needhi maiam president, actor kamal haasan trichy election campaign

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகையில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

 

அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற மன்றத் தேர்தலுக்கான மூன்று கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (27/12/2020) தொடங்குகிறார். 

 

மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (27/12/2020) மாலை 04.00 மணிக்கு திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (27/12/2020) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மதியம் 12.30 மணியளவில் வருகை தர உள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் தனி விமானம் இறங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

makkal needhi maiam president, actor kamal haasan trichy election campaign

இதனால் திருச்சியில் இறங்க வேண்டிய தனி விமானம் மதுரையில் இறங்குவதாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் மதுரைக்கு வரக்கூடிய விமானத்தில் கமல்ஹாசன் வருவதாகவும், பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கி, அங்கிருந்து சாலை வழியாக திருச்சிக்கு வருவதாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டது. 

 

மேலும் மதுரைக்கு வந்து தனி விமானம் மூலம் இறங்கும் கமல்ஹாசன் மதுரையில் இருந்து சாலை வழியாக திருச்சிக்கு வருவதாக மற்றொரு தகவலும் கொடுக்கப்பட்டது. இதனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் இரண்டு மணி நேரமாக எங்கு சென்று வரவேற்பு அளிப்பது என்பது தெரியாமல் பெரிய குழப்பத்தில் பல இடங்களுக்கு மாறி மாறி அலைந்து, தற்போது ஹெலிகாப்டர் தரையிறங்க உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் கமல்ஹாசனில் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.