Skip to main content

மாஜி காங்கிரஸ் சமஉ நாளை கட்சியிலிருந்து விலகல்.. பாஜகவில் இணைய திட்டம்?

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

 

sw

 

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு அந்தக் கட்சியில் நீடிக்க பிடிக்கவில்லை என்று ஜூலை முதல் நாளில் கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளார். இந்த முடிவையறிந்த மாநிலத்தின் புதிய கட்சிகளும் நாடாளும் தேசியக் கட்சியும் அவரை வரவேற்க தூது அனுப்பியுள்ளனர். ஆனால் இன்னும் சில நாட்களில் நாடாளும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவுகிறது.
  

  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பம். 1991 - 96 காலத்தில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து கட்சியில் செயற்குழு போன்ற பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.  மேலும் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவில் உயர்மட்ட குழுவில் உள்ளார். நெடுவாசல் திட்டம் போராட்டக் காலங்களில் தீவிரமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கும் குழுவில் இருந்தார்.

 

 தற்போது காங்கிரஸ் கட்சியில் தனக்கு மாநில அளவில் பொறுப்புகளை எதிர்நோக்கி காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறைவு மற்றும் கட்சியின் தேய்மானத்தை கருத்தில் கொண்டு வெளியேற முடிவெடுத்துள்ளார். 

 

பல மாதங்களுக்கு முன்பே வெளியேறும் தகவலை கட்சி தலைமை வரை கொண்டு சென்றும் பலனில்லை என்பதால் ஜூலை முதல் நாளில் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்து அறிவிக்க உள்ளார்.
  

பாஜக வில் இணைய திட்டம்?   மாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் தகவல் அறிந்த அதிமுக, அமமுக, அதிக போன்ற கட்சிகள் அவரை இழுக்க முயற்சிகள் செய்துவந்த நிலையில் பாஜக விரித்த வலையில் மாஜி சுவாமிநாதன் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தான் மட்டும் விலகி பாஜக வில் இணைந்தால் மரியாதையில்லை.  அதனால் என்னுடன் சிலர் வரலாமே என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள வட்டார நிர்வாகிகள் பலரிடம் கேட்டுள்ளார்.  பலரும் முடியாது என்ற பதிலை சொல்லிவிட்டனர். ஆனால் பொறுப்புகளுக்காக காத்திருந்து கிடைக்காமல் உள்ளவர்கள் மாஜியுடன் பாஜக செல்ல தயாராகி உள்ளனர்.


 முதலில் விலகல் அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சர் பொன். ஆர். தலைமையில் இணைப்பு என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களே இல்லை இளைஞர்களை சேருங்கள் என்று மாஜி ப.சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வரும் நிலையில் அதே காரணத்தை சொல்லி சுவாமிநாதன் வெளியேறுகிறார் என்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்