Skip to main content

மதுரை ரவுடியை சுட்ட விவகாரம்; போலீஸாரின் குற்றச்சாட்டை மறுக்கும் குடும்பத்தினர்! ம.உ.ஆணையத்தில் புகார்?

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Madurai rowdy   case; Family denies police allegations

 

மதுரையில் இன்று காலை ரவுடி ஒருவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையால் சுடப்பட்டவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது செண்பகத்தோட்டம். இங்கு உள்ள மீனவர் சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை இன்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது அந்தப் பெண் கூச்சலிட்டு உள்ளார்.

 

அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவசர உதவி எண்ணான 100க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். அச்சமயம் போலீசார் சுட்டதில் ரவுடி குருவி விஜய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காலில் காயம்பட்ட நிலையில் ரவுடி குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பிடிப்பட்ட ரவுடியின் கூட்டாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சுடப்பட்ட குருவி விஜயனின் அம்மா கண்ணகி, அவரது சகோதரி லாவண்யா ஆகியோர் கதறியபடி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தனர். பின்னர் நம்மிடம் அவர்கள் கூறியதாவது; ‘இரவு 11.30 மணிக்குவந்த போது என் மகனை வழிபறி விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்றார்கள். நானும் என் மகள் லாவண்யாவும் கூடவே அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சென்றாம். எங்களை இரவு 12 .30 மணிக்கு வீட்டிற்க்கு போங்க உங்க மகனை விசாரித்து விட்டு அனுப்பிவிடுவோம் என்று சொன்னதால் நம்பி வீட்டிற்க்கு வந்தோம். பின்பு இரவு 2 மணிபோல் வீட்டின் முன்பு காவல் ஜீப் வந்த சத்தம் கேட்டு மாடியிலிருந்து பார்த்தோம். அப்போது என் மகனோட இன்னொரு பையனையும் இழுத்து வந்தார்கள். அய்யய்யோ என்று கத்திகொண்டே கீழே வந்தேன். அதற்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நான் கதவை திறந்து வெளியே வருவதற்குள் இரத்தம் சொட்ட சொட்ட என் மகனை தூக்கி போலீஸ் ஜீப்பில் போட்டார்கள். நான் கத்தி கொண்டு ஓடி வருவதை தடுத்து நிறுத்தி என்னை தள்ளி விட்டு ஜீப் பறந்தது. பின்னாலேயே ஓடி அண்ணா நகர் காவல் நிலையத்திற்க்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை எங்களை வெளியே போ என்று அனுப்பினார்கள். வேறு வழியின்றி கலெக்டர் அய்யாவை பார்த்து காப்பாற்றும்படி சொல்ல வந்தோம்’ என்று அழுதபடி சொல்ல அதற்குள் போலீஸ் வந்து அந்த குடும்பத்தை வெளியேற்றினார்கள்.

 

Madurai rowdy   case; Family denies police allegations

 

இது குறித்து அண்ணா நகர் காவல் நிலைத்தை தொடர்பு கொண்டோம் அங்கிருந்த காவலர், “சார் இங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் இருவரையும் அந்த ரவுடி கல்லால் தாக்கியதால் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெறுகிறார்கள். அந்த ரவுடியும் அங்கு தான் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்” என்று தகவல் சொன்னார். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மதுரை அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும், ரவுடி குருவி விஜயின் சகோதரி லாவண்யா, தனது சகோதரன் சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.