Skip to main content

மதுரையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கைது!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

madurai person salem district police arrested


சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரள வனப்பகுதிக்குள் மறைந்து இருந்து கூட்டாளிகளுடன் செயல்பட்டு வந்தார்.

 

கடந்த 2019- ஆம் ஆண்டு கேரளாவின் தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய உடலை நீதிமன்றம் மூலம் பெற்று சேலம் கொண்டுவந்த குடும்பத்தினர், சொந்த ஊரில் தகனம் செய்தனர்.

 

இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மாவோயிஸ்ட்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், 'ஆயுதம் ஏந்துவோம்' என்றும் 'ரத்தக் கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம்' என்றும் சபதம் செய்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடக்கத்திலேயே, மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கைகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன், மதுரையைச் சேர்ந்த விவேக், காடையாம்பட்டியைச் சேர்ந்த சுதாகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

தேர்தல் நெருக்கத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓமலூர் டி.எஸ்.பி. சோமசுந்தரம், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர், கியூ பிராஞ்ச் காவல்துறையினர் ஆகியோர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த (இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த) மாவோ ஆதரவாளர்கள் செல்வராஜ் (55), பாலன் (41), சீனிவாசன் (66), சித்தானந்தம் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுரேஷ் ராஜன் (45) என்பவரை வியாழக்கிழமை (பிப். 18) இரவு, சேலம் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை வெள்ளியன்று காலை தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். 

 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் எங்கெங்கு சுற்றித்திரிந்தார்? யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? அவர் பின்னணியில் உள்ள மாவோக்கள் யார் யார்? பாதுகாப்பு கொடுத்த நபர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்தனர். விசாரணை முடிந்ததை அடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது