Skip to main content

வதந்தி விவகாரம்; பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

madurai high court refuses to grant bail to BJP executive in rumour-mongering case

 

வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.  

 

இதனிடையே தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி பதிவிட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாகச் சித்தரித்து இவர் வதந்தி பரப்பியுள்ளார். இவர் பரப்பிய வதந்தி அடுத்தடுத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.  

 

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் முன்ஜாமீன் கேட்டு தமிழக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து பிரசாந்த் உம்ராவ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வந்தபோது, நான் இந்த வீடியோவை உருவாக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இவர் பரப்பிய வீடியோவால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதனால் பிரசாந்த் உம்ராவ்வை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இது அனைத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் பரப்பிய வீடியோவால் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு தமிழகத்தில் பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது என்று தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, மனுதாரருக்கு முன்ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.