Skip to main content

வதந்தி விவகாரம்; பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

madurai high court refuses to grant bail to BJP executive in rumour-mongering case

 

வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.  

 

இதனிடையே தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி பதிவிட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாகச் சித்தரித்து இவர் வதந்தி பரப்பியுள்ளார். இவர் பரப்பிய வதந்தி அடுத்தடுத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.  

 

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் முன்ஜாமீன் கேட்டு தமிழக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து பிரசாந்த் உம்ராவ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வந்தபோது, நான் இந்த வீடியோவை உருவாக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இவர் பரப்பிய வீடியோவால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதனால் பிரசாந்த் உம்ராவ்வை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இது அனைத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் பரப்பிய வீடியோவால் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு தமிழகத்தில் பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது என்று தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, மனுதாரருக்கு முன்ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்