![Madurai Chithirai Festival Crowd ... Helpline Numbers Announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/1PONjbnl1V191M5aLMNB54tPUDCwUFLUcyMQT-UxEgs/1650083754/sites/default/files/inline-images/1313_1.jpg)
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவில் வளாகத்திலேயே நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் தங்கப்பல்லக்கில் கொண்டுவரப்பட்டு இன்று காலை வைகையில் இறங்கினார். அழகர் பச்சை பட்டுடுத்தினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். அதன்படி பச்சை பட்டுடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
![Madurai Chithirai Festival Crowd ... Helpline Numbers Announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/O2AfFHg4gzBmYrHVWG-M9kKGB26yPyZe7FQDT_OWf7o/1650083895/sites/default/files/inline-images/ZZZCADADA.jpg)
இந்நிலையில், வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக் காண வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கூட்ட நெரிசலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். வைகை ஆற்றில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இறந்த இருவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அதேபோல் மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் காணாமல் போயிருந்தால் மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.