Skip to main content

நடுரோட்டில் நின்று கத்தித் தீர்த்த மகளிர் சிறைக் காவலர்! -தொடரும் கரோனா கொடுமைகள்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

MADURAI CENTRAL PRISON

 

மதுரை மத்தியச் சிறையில், இரண்டு வார்டன்களுக்கும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டர்ஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

 

ஜெயில் குவார்ட்டர்ஸில் உள்ள வீட்டில் அவர்கள் தங்கியிருந்த விஷயம் உயர் அதிகாரிக்கு தெரிந்ததும், “அவங்க எப்படி குவார்ட்டர்ஸுக்கு வரலாம்?” என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதித்திருக்கிறார் உயரதிகாரி. ஜெயிலர், ஹெட் வார்டன் என ஒவ்வொருவராக அனுப்பி, “இது உயரதிகாரி உத்தரவு.. நீங்க இங்கே இருக்கக்கூடாது.. உடனே கிளம்புங்க..” என்று குடைச்சல் கொடுத்தார். “நாங்க எங்கே போக முடியும்?” என்று அவர்கள் கேட்டதற்கு, “உங்களுக்கென்றே 4 ஓட்டு வீட்ட ஒதுக்கி வச்சிருக்கோம்..” என்று, உயர் அதிகாரி சொன்னதை ஒப்பித்துள்ளனர், ஜெயிலரும், ஹெட் வார்டனும்.  

 

“அந்த பழைய கட்டடத்த இடிக்கணும்னு ஆர்டரே இருக்கு. பாம்பு, பல்லி அடைஞ்சு பாழடைஞ்சு கிடக்கிற அந்த ஓட்டு வீட்ல மனுஷன் எப்படி குடியிருக்க முடியும்?” என்று  தங்களைத் தனிமைப்படுத்தி இருந்தவர்கள் கேட்க, “நீங்க அங்கேதான் இருக்கணும்.. குவார்ட்டர்ஸ்ல இருந்தா எல்லாருக்கும் பரவும். இல்லைன்னா உங்க சொந்த ஊருக்கு கிளம்புங்க.. இது மேலதிகாரியோட உத்தரவு..” என்று கறார் காட்டியுள்ளனர். வேறு வழியின்றி, அந்த வார்டன் குடும்பம் வரிச்சியூர் பக்கம் உள்ள கிராமத்துக்குப் போனது. இன்னொரு வார்டன், தனது மோட்டார் பைக்கிலேயே திருநெல்வேலி கிளம்பினார்.  

 

சாத்தூர் மகளிர் சிறையில் பணிபுரிந்த முதல் தலைமைப் பொறுப்பிலுள்ள பெண் காவலர் ஒருவர், நிர்வாகக் காரணங்களுக்காக, மதுரை மத்தியச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மதுரையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு ‘டிரான்ஸ்ஃபர்’ செய்தார், அந்த உயரதிகாரி. அவரும் கிருஷ்ணகிரி மகளிர் சிறைக்குச் சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள, அவர் அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவர, அங்கே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். பிறகு, ‘டிஸ்சார்ஜ்’ ஆன அவரை, அந்த ஊர் சாலை ஒன்றில் இறக்கிவிட்டுச் சென்றது ஆம்புலன்ஸ். அடுத்து எங்கே போவதென்றே தெரியாத நிலையில், மதுரை மத்தியச் சிறையின் உயரதிகாரியை ஃபோனில் தொடர்புகொண்டு “இப்ப நான் நடுரோட்ல நிக்கிறேன். நீங்கதானே எனக்கு டிரான்ஸ்ஃபர் போட்டீங்க? எனக்கு ஒரு வழி சொல்லுங்க..” என்று கத்தித் தீர்த்திருக்கிறார். உடனே அந்த மதுரை அதிகாரி, கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்திடம் பேச, கிருஷ்ணகிரியிலிருந்து கார் ஏற்பாடு செய்து,  சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.    

 

சிறைகளில் பணிபுரிபவர்களே, கரோனா பாதிப்புக்கு ஆளாகும்போது, இத்தனை மோசமான அனுபவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்றால்,  மனிதநேயம் எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.