தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காவது முறையாக கரோனா பாதிப்பு என்பது 4 ஆயிரத்தைக் கடந்து தமிழகத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று 1,713 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 68 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பில் ஒரே நாளில் 21 பேர் இறந்துள்ளனர்.
வேறு நோய் பாதிப்பில்லாத 3 பேர் இன்று கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 119 பேரும், திருவள்ளூரில் 94 பேரும், காஞ்சிபுரத்தில் 33 பேரும், மதுரையில் 62 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 2,186 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 62, 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் 315 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் கரோனாவிற்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 315 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 4,789 ஆக அதிகரித்துள்ளது, இதனால் அங்கு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 5000-ஐ நெருங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 84 ஆக இருக்கிறது. 1,716 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை செங்கல்பட்டில் மொத்தம் 6,552 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 142 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை திருவண்ணாமலையில் 1,050 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,067 ஆக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 1,068 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 146 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை 33 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,354 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் பரமக்குடியைச் சேர்ந்த ஒருவரும், கமுதி சேர்ந்த ஒருவரும் இறந்துள்ளனர். இதனால் ராமநாதபுரத்தில் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது அங்கு ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,051 பேருக்கு கரோனா இதுவரை அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 778 பேர் சிக்கியுள்ளனர், 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தமாக இதுவரை அங்கு 6 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 200 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 191 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் ஒரேநாளில் 179 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னையில் பாதிப்பு குறைவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,
''சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றிதான். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதை விட அதைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்'' என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டும் தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,437 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.