Skip to main content

மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்! -தகிக்கும் தங்கம் தென்னரசு!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Lot of confusions in sengotaian's school education announcements! thangam thenarasu question

 

‘பாடம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கவே பள்ளிகள் திறக்கப்படுகின்றன..’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ‘இந்த அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பிடிபிடித்துள்ளார். 

 

திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர்  தங்கம் தென்னரசுவின் ஆதங்கம் இதோ -    

 

‘என்னதான் சார் பண்ணப் போறீங்க?‘ அக்டோபர் 1 ம் தேதி 10, 11, & 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும்ன்னு சொல்றீங்க. ஆனால், கூடவே ஆன் லைன்ல பாடம் நடத்துவோம்ன்றீங்க.

 

“பாடங்களைச் சொல்லித்தருவதற்கு  இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கறோம்ன்னு”          சொல்றீங்க. அப்படியான்னு கேக்குறதுக்குள்ள, மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம்ன்னு ஒரு ‘குண்டைப்’  போடறீங்க.

 

அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி.ஓ. போட்டுட்டு  நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

 

பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா? இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க? 

 

இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது. ஈரோட்டில் ஒரு அறிவிப்பு ; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு.

 

‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக்குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?” என்று கேட்டுள்ளார். தங்கம் தென்னரசுவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிப்பாரா? 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்