Skip to main content

‘தமிழக காவல்துறையில் ஒருவர் மட்டும்தான் சிறந்தவரா? பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை!’- அரசு தரப்பு வாதம்! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஆஸ்திரேலியாவிலிருந்து யுரேனியம் கொள்முதல் செய்வதற்காக நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

lord statue pon manickavel ips investigation chennai high court



சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
 

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், அதுவே இறுதி உத்தரவாகும். அந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது. உச்சநீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது.’ என வாதிட்டார்.மேலும் அவர்,‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் பொன்மணிக்கவேல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிக்கு வழங்கவில்லை. வரும் 30-ஆம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது’ என்றும் தெரிவித்தார்.

lord statue pon manickavel ips investigation chennai high court


இதனைத் தொடர்ந்து அவர், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவர் கூடுதல் டிஜிபி என்றும் அதன் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த அறிக்கையையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன்மாணிக்கவேல் கூறிக்கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை. யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமரின் கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப்பெறப்பட்டன. பொன்மாணிக்கவேல் மீட்டதாக தவறான செய்திகளை பரப்புகிறார்.’ என்று தெரிவித்தபோது குறுக்கிட்ட நீதிபதிகள்‘பொன்மாணிக்கவேல் மீட்கவில்லையென்றால் அரசு அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்படாமல், பொன்மாணிக்கவேல் வசம் எப்படி ஒப்படைக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.

lord statue pon manickavel ips investigation chennai high court


இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘மாநில அரசின் பிரதிநிதி என்று கூறி பொன்மாணிக்கவேல்  சிலைகளை மீட்டதாகவும், அந்த சிலைகள், அது பற்றிய தகவல்கள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை தமிழக காவல்துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கும் போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என்று கூற முடியாது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவை மீண்டும் புனரமைத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பதற்கு சிறப்பு அதிகாரி பொன்மானிக்கவேல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20- ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.