Skip to main content

ஊரடங்கு விதிகளை மீறும் கடைகள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்! சேலம் மாநகராட்சி மீண்டும் எச்சரிக்கை!!

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

lockdown government rules salem commissioner


தமிழக அரசின் ஊரடங்கு விதிகளை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உடனடியாக கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் மீண்டும் எச்சரித்துள்ளார்.

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களிடையே தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மாநகர பகுதிகளில் பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது 16.4.2020ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட கால நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

 

இந்தக் கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும். மேலும், கடையின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து செயல்படவும், குளிர்சாதனங்களை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடைகள், வணிக தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹேண்ட் சானிடைஸர்கள் வைத்திருக்க வேண்டும்.

lockdown government rules salem commissioner

இவை தவிர பிற அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் முழு ஊரடங்கு நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

 

மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க, மாநகராட்சி நிர்வாகம் 40 சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. 

 

விதிகளை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005- ன் கீழ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படுவதோடு, கடை, நிறுவனம் உடனடியாக பூட்டி 'சீல்' வைக்கப்படும்.

 

ஆகவே, சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் செயல்படவும், தமிழக அரசின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளபடி தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாநகராட்சியின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.