ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் பொதுவாக தினசரி 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாவது வழக்கம்.
இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு சுமார் 8 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு 6 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்காக பொது இடங்களில் கும்பல் கூடக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, பார்ட்டி வைக்கக் கூடாது என பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு, காவல்துறை மூலம் விதித்திருந்தது.
அதையும் மீறி நகரம், கிராமப்புறங்கள் என வித்தியாசம் இல்லாமல் பல இடங்களில் மக்கள் புத்தாண்டை வெகுவாக கொண்டாடியுள்ளனர். பேக்கரி கடைகளில் கேக் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை நடைபெற்றது. அரசின் கட்டுப்பாடுகள் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடக் கூடாது என்பதுதான். அதனால், அவரவர் பகுதிகளில் கும்பல் கும்பலாக புத்தாண்டை மது அருந்தி கொண்டாடியுள்ளனர்.