Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லிப்ரா ப்ரொடக்ஷன்! 

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

LIBRA PRODUCTION STATEMENT TAMILNADU CHIEF MINISTER MKSTALIN


முக்கிய அரசியல் தலைவர்கள் பயணம் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இத்தகைய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதில் தொடங்கி பாதுகாப்பு பிரச்சனைவரை பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவதாக நீண்ட நாட்களாகவே கூறப்பட்டுவந்தது. சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் போலீஸ் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கலை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் இது தொடர்பாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் போலீஸாரை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்று பலரும் கருத்துத் தெரிவித்துவந்தனர்.

 

இந்த நிலையில், சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு டி.ஜி.பி. திரிபாதி நேற்று முன்தினம் (13/06/2021) உத்தரவிட்டார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே, இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. சாலை பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்களிக்கப்பட்டதைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக, லிப்ரா ப்ரொடெக்ஷனின் ரவீந்தர் சந்திரசேகர் இன்று (15/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 2019ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தைக் காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும், சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக்கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக வி.ஐ.பி.க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறு முதலீட்டில் பெரும் வலியைச் சொன்ன அந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்துவருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம்.

 

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் 11ஆம் தேதி, அத்திரைப்படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம். திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களைச் சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்துவந்தது. இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

 

‘முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்’ என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது காவல்துறை டி.ஜி.பி.யின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்தப் படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

 

எந்த வலியை ‘மிக மிக அவசரம்’ படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு. நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியைச் சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்?

 

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய ஜெகன்நாதையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும் மனதார வாழ்த்துகிறேன். இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா ப்ரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமைகொள்ளும்.  

 

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நொடியில் இருந்து, சொல்லப்போனால் வெற்றிச் செய்தி வந்த நொடியில் இருந்தே, கரோனாவிற்கெதிரான பெரும்போரில் முன்களத்தில் நின்று சமரிட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். அவரது ஓயாத செயல்பாடுகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும், அதிரடி அறிவிப்புகளாலும் மாற்றுக் கட்சியினரும் வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் ஆட்சியை செயல்படுத்திவருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

 

இந்த அறிவிப்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் இனி சூடப்போகும் மகுடங்களின் உச்சியில் வைரமாய் ஜொலிக்கும். ‘மிக மிக அவசரம்’ படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகவும், முதல்வருக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறைகொண்டிருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இந்த நேரத்தில் சில கோரிக்கைகளையும் வைக்க விரும்புகிறேன்.

 

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

 

2. கரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

 

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின்போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

 

4. கரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

 

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் ‘மிக மிக அவசரம்’ போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

 

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாது சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.