திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, ஆய்வுக் கூட்டத்திற்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். முதல்வர் வருகை என்பதால் ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருந்தன. அதன்படி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேடை மற்றும் பந்தல் அமைத்திருந்தனர். அங்கு முன்னாள் முதல்வர் ஜெ' புகைப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகைப்படத்தின் அருகில், மேடையில் ஒரு பெண் மருத்துவர், ஒரு பெண் செவிலியரை மாவட்ட சுகாதாரத்துறை நிறுத்தி வைத்தது. முதல்வர் வந்ததும் செவிலியர் அவரது கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவேண்டும், மருத்துவர் அவரது உடலில் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்? முதல்வரை பரிசோதிக்கும்போது எப்படி நிற்க வேண்டும், பரிசோதனை செய்தபின் எப்படி அங்கிருந்து நகர்ந்து தூரமாகச் செல்ல வேண்டும் என ஒரு மணி நேரத்தில் மாவட்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என தனித்தனியாக அவர்களுக்குப் பயிற்சி தந்தனர்.
மேடைக்கு எந்த மருத்துவர், செவிலியரை அனுப்புவது என அதிகாரிகள் ஆரம்பத்தில் டிஸ்கஸ் செய்தபோது, மேடை உட்பட பலவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ'வுக்கு பிடித்த பச்சை வண்ணத்தில் இருக்கும்படி முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதேபோல் அந்த மருத்துவரையும் பச்சை வண்ண உடை உடுத்திவரச் சொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளனர். அதன்படி அந்த மருத்துவரும் பச்சை வண்ண பட்டுப் புடவையில் மேடையில் நின்றிருந்தார்.
முதல்வர் வந்து கிருமி நாசினியைக் கைகளில் தெளித்துக் கொண்டும், உடல் வெப்பத்தை பரிசோதித்துக் கொண்டும் மேடையை விட்டு இறங்கியதும், அந்தப் பெண் மருத்துவரும், செவிலியரும் புன்னகையோடு மீண்டும் மேடையேறி மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெ' படத்துக்கு அங்கிருந்த ரோஜா பூக்களை தூவி அஞ்சலி செலுத்துவது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைப் பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சில துறைகளின் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்துவது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்படித் தொடர்ந்து பலரும் மலர் தூவி போட்டோ எடுத்ததைப் பார்த்த மற்ற அதிகாரிகளுக்கு இச்சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.