A leopard that entered the house; Bustle in Cuddalore

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆளில்லாத வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது சேமுண்டி பகுதி. அந்த பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த இடும்பன் என்பவர் தன்னுடைய உடமைகளை தோட்டத்தில் உள்ள வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் இன்று பொருட்களை எடுக்க அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத அந்த சிறிய வீட்டுக்குள் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்ற பொழுது சிறுத்தை ஒன்று இருந்தது தெரியவந்தது. பின்னர் அலறி அடித்துக் கொண்டு கதவை சாத்திவிட்டு ஓடிவந்த இடும்பன் இதுகுறித்து தோட்டத் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தொழிலாளர்கள் உள்ளே எட்டிப் பார்த்த பொழுது உள்ளே சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வீட்டுக்குள் சிறுத்தை நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி வீட்டிற்குள் சிக்கி இருக்கும் சிறுத்தையைபிடிக்க வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.