Skip to main content

சட்டக்கல்லூரி மாணவர் அடித்துக் கொலை; நண்பர்கள் உள்பட 5 பேர் கைது

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

law college student passed away police arrested his friends

 

நாமக்கல் அருகே சட்டக்கல்லூரி மாணவர் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி, வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சங்கீத்குமார் (21). ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சங்கீத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்கள் அலெக்ஸ் என்கிற அலெக்ஸாண்டர் (30), மவுலீஸ் என்கிற மவுலீஸ்வரன் (25), பரத் என்கிற பாரத் (25) ஆகியோருடன் சேர்ந்து சங்கீத்குமார் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். கைச்செலவுகளுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சங்கீத்குமாருக்கும் கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விடிந்தால் தீபாவளி பண்டிகை என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 23) நள்ளிரவு கொசவம்பட்டி மயானம் அருகே அலெக்ஸ், மவுலீஸ், பரத் ஆகியோர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீத்குமார் அங்கு சென்றார். அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

ஆத்திரம் அடைந்த கூட்டாளிகள் சங்கீத்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக சங்கீத்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் நண்பர்கள் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சங்கீத்குமார் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். அவர் இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சடலம் உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து கொலையாளிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் பதுங்கியுள்ள இடம் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதற்கிடையே நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் புதன்கிழமை (அக். 26) போதுப்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பேருந்தில் இருந்து இறங்கிய அலெக்ஸ், மவுலீஸ், பரத் ஆகிய மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

 

மேலும் கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்ததாக கோணங்கிப்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (19) கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கொசவம்பட்டியைச் சேர்ந்த சூர்யா (24) ஆகியோரையும் கைது செய்தனர். பிடிபட்ட ஐந்து பேரிடமும் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம், இந்த சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன குறித்து பலவேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.