Skip to main content

சொத்து தகராறில் முட்டுக்கட்டை: சித்தப்பா, சித்தியை கொலை செய்த கல்லூரி மாணவர்! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

krishnagiri incident college student arrested police investigation

 

கிருஷ்ணகிரியில், பூர்வீக சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாக இருந்ததால் சித்தப்பா, சித்தி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கல்லூரி மாணவரையும், அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், வீரப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு இளங்கோவன் (வயது 58), புகழேந்தி (வயது 55), கரிகாலன் (வயது 50) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். மூவரும் கார்ப்பெண்டர் வேலை செய்துவருவதோடு, சொந்தமாக வீடு அருகே பெட்டிக்கடையும் வைத்துள்ளனர்.

 

இவர்களுடைய தந்தை ராஜகோபால், ஏற்கனவே இறந்துவிட்டார். அதே பகுதியில், அவருடைய பெயரில் 3 ஆயிரம் சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. தந்தை மறைவுக்குப் பிறகு இந்த நிலத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்து வருகிறது.

 

இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புகழேந்தி தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை (மே 5), இந்த நிலம் தொடர்பாக சகோதரர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் வார்த்தைகள் எல்லை மீறிப்போகவே, அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.

 

சொத்து தகராறு தொடங்கியதில் இருந்தே இளங்கோவன் வீட்டில் தினமும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. சொத்து பிரித்துக்கொள்வதில் புகழேந்தி மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.

 

இளங்கோவனுக்கு லோகேஷ் (வயது 19) என்ற மகன் உள்ளார். அவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தன் தந்தையின் நிம்மதியற்ற நிலைக்குத் தனது சித்தப்பா புகழேந்திதான் காரணம் என்றும், அவரை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்றும் லோகேஷ் தீர்மானித்துள்ளார்.

 

இதையடுத்து லோகேஷ் (வயது 19), அவருடைய நண்பரான காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (வயது 19) என்பவரை அழைத்துக்கொண்டு, நள்ளிரவுக்கு மேல், புகழேந்தியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து புகழேந்தி வெளியே வந்தார். 

 

அவரை, கண்ணிமைக்கும் நேரத்தில் லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பப்பி ராணி (வயது 45) வெளியே ஓடி வந்தார். அவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

 

இந்தக் களேபரத்தால் பதற்றத்துடன் வெளியே வந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் லோகேஷின் மற்றொரு சித்தப்பாவான கரிகாலன், சித்தி சரஸ்வதி (வயது 42) ஆகியோர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

 

இச்சம்பவம் குறித்தும், கொலையாளிகள் தப்பிச்சென்றது குறித்தும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சதீஷ், லோகேஷ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினர். விசாரணையில், அவர்கள்தான் மேற்படி சம்பவத்தில் கொலையாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரோந்து காவல்துறையினர் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

இதற்கிடையே, சடலங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், லோகேஷின் பெற்றோருக்கு தாத்தா சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் புகழேந்தி இடையூறாக இருந்ததால் அவரையும், தடுக்க வந்ததால் அவருடைய மனைவியையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.