இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கேப்மாரி’ திரைப்படம் நாளை (13-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்குத் தடை கோரி பிரம்மனாந்த் சுப்பிரமணியன் என்பவர் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்ற நபரான சிதம்பரம் என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

kepmari movie

அந்த மனுவில், ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் வினியோக உரிமைக்காக இயக்குனர் சந்திரசேகருக்கு 20 லட்சத்து 62 ஆயிரம ரூபாயைக் கொடுத்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, நஷ்டம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பித் தரவில்லை எனவும், அந்தப் பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேப்மாரி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்தப்படி பணத்தை வழங்காமல் கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் இயக்குனர் சந்திரசேகர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், சந்திரசேகர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கேப்மாரி படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.