Skip to main content

கீழடி அகழாய்வை 5ஆம் கட்டத்தில் நிறுத்திவிட்டது ஏன்? அதிமுக அரசுக்கு வேல்முருகன் கேள்வி! 

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

5ஆம் கட்டம் நடந்துகொண்டிருந்த கீழடி அகழாய்வு திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. அதிமுக அரசே இதை அறிவித்திருக்கிறது. நிறுத்தம் ஏன், எதற்கு என்கின்ற இயல்பாகவே எழும் கேள்வியையும் தாண்டி அது பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. காரணம், கீழடி அகழாய்வு நிறுத்தப்படுவது முதல் முறையல்ல; இது இரண்டாவது முறையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 
 

முதல் முறை அதை நிறுத்தியது மட்டுமல்ல; அகழாய்வையே கைகழுவியதாக அறிவித்தது ஒன்றிய தொல்லியல் துறை. அதன் சார்பில் அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வில் ஈடுபட்டிருந்தார். அகழாய்வின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி 2017 பிப்ரவரியில் ஓர் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், “நகரிய நாகரிகத்திற்கான கட்டுமானங்கள் மற்றும் இதர சான்றுகள் முதல் முறையாகக் கிடைத்திருக்கின்றன” எனச் சொல்லியிருந்தார். அவ்வளவுதான், உடனடியாக அவரை கீழடியிலிருந்து தூக்கியடித்தது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு. அவருக்குப் பதிலாக ஸ்ரீராமன் என்பவரைப் பணியமர்த்தியது. ஸ்ரீராமனோ, “மேற்கொண்டு சான்றுகளே அகப்படவில்லை” என்று ஒரே பக்க அறிக்கையை அளித்து அந்த மூன்றாமாண்டோடு தனது ஆய்வினை முடித்துக் கொண்டார். அத்தோடு அகழாய்வையே ஊற்றிமூடிவிட்டுக் கீழடியையே காலி செய்தது ஒன்றிய தொல்லியல் துறை.

 

Velmurugan tvk



இதனைத் தமிழகமே ஒருசேர எதிர்த்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன; “அமர்நாத் இராமகிருஷ்ணனை மீண்டும் கீழடியில் அமர்த்து!” என்று முழங்கின. ஆனால் அதிமுக அரசும் சரி, அமைச்சர் மாபா பாண்டியரஜனும் சரி, பாஜகவும் சரி; இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நிரூபித்தனர்.
 

மாறாத எதிர்ப்பின் காரணமாக, தமிழகத் தொல்லியல் துறையே கீழடி ஆய்வை மேற்கொள்ளும்படியானது. சிவானந்தம் தலைமையில் நான்காம் ஆண்டு ஆய்வில் கிடைத்த சான்றுகள் தற்போது புதிய உண்மைகளை உணர்த்தியிருக்கின்றன. “தேர்ந்த எழுத்தறிவும் சீரிய கலையுணர்வும் கைவினைத் தொழில்நுட்பமும் வெளிநாட்டு வணிகமும் 2600 ஆண்டுகளுக்கு முன்பேயே பெற்றிருந்தவர்கள் தமிழ்மக்கள்” என்கின்றன அந்த நான்காம் ஆண்டு கீழடி அகழாய்வுச் சான்றுகள். இப்போது அய்ந்தாம் ஆண்டு ஆய்வு நிறைவுற்ற நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு நடந்துவந்த நிலையில் 09.10.2019 அன்று மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று தொழிலாளர்கள் அகழாய்வுக் களத்திற்கு பணிக்காக வந்த போதுதான் அகழாய்வு நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பையே வெளியிட்டது அதிமுக அரசு.


 

110 ஏக்கர் கீழடி தொல்லியல் மேட்டைச் சுற்றி மேலும் 90 ஏக்கர் மேடு உள்ளது. நான்கு ஊர்களை உள்ளடக்கிய அந்த மேடும் தொல்லியல் எச்சங்களைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகவே அதையும் அகழாய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆக கீழடி உள்ளிட்ட சுற்றியுள்ள மொத்தம் 200 ஏக்கர் மேட்டையும் “பாதுகாக்கப்பட்ட பகுதியாக” உடனடியாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசு என்ற கோரிக்கை எழுந்து அது வலுப்பெற்றுள்ளது.
 

அதோடு, கீழடியில் இதுவரை கிடைத்த சான்றுகள், உலகின் “நாகரிகம் வாய்ந்த தொல்குடிகள் தமிழர்கள்” என்பதைச் சொல்வதால் அதனை உலகறியச் செய்ய, கீழடியில் கிடைத்த அனைத்து சான்றுகளையும் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கும் வண்ணம் உலகத் தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகம் ஒன்றை அங்கே அமைக்க வேண்டியது அவசிய அவசியமாகும் என்ற கோரிக்கையும் எழுந்து வலுப்பெற்றுள்ளது.


 

அது மட்டுமல்ல; கீழடியைப் பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இது அங்கு திருவிழா நடப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. இப்படியான ஒரு விழிப்புணர்வு மற்றும் உற்சாகம் பொங்கும் சூழலில்தான் கீழடியில் மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டதால் சந்தேகம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த சந்தேகம், மூன்றாம் ஆண்டில் கீழடியை ஊற்றிமூடிய அதே ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் நெருக்கடியால்தான் இந்த நிறுத்தமோ என்கிற சந்தேகமாகவும் படுகிறது.
 

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஒன்றிய அரசின் உதவியை நாடுவதாக அறிவித்திருந்தார். அவர் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு வேண்டப்பட்டவர் என்பதை நாடே அறியும். இதையும் இந்த சந்தேகத்தில் உள்ளடக்கத்தான் வேண்டியுள்ளது.
 

இந்த சந்தேகம் உண்மையாகிவிடக் கூடாது என்றே நம்புகிறோம். அதற்கு முன், அதிமுக அரசே நிறுத்தத்திற்கான காரணத்தை விளக்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
 

அதோடு, கீழடி உள்ளிட்ட சுற்றியுள்ள மொத்தம் 200 ஏக்கர் மேட்டையும் “பாதுகாக்கப்பட்ட பகுதியாக” உடனடியாக அறிவிக்க வேண்டும்; அங்கு உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.