Skip to main content

கொசுவலை ஏற்றுமதி ஆலையில் 435 கோடி வருமான வரி ஏய்ப்பு! 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

80 கோடி ரொக்கம் பிடிபட்டதுடன், 435 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. இதில், 80 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

கரூரைச் சேர்ந்த சிவசாமிக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மிக சாதாரண முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தற்போது, தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படும் மிக முக்கியமான நிறுவனம். 

KARUR SHOBIKAA IMPEX PRIVATE COMPANY INCOME TAX OFFICERS RAID


இந்த நிறுவனம் கரூரில் வி.கே.ஏ பாலிமர்ஸ் மற்றும் சோபிகா இம்பெக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஆல்பா சைபர் மெத்ரின் என்ற ரசாயனக் கொசு வலைகளை ஐ.நாவின் விதிமுறைகளுக்குட்பட்டு தங்களது தயாரிப்புக் கூடங்களில் தயாரித்து, இந்தியாவிலே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மட்டுமே உரிமம் பெற்றுள்ளது. ஆனால் ஏற்றமதி ரக வேதிப்பொருள் கலந்த கொசுவலையை உள்ளூரில் விற்பனை செய்து வந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்படுவதால், மனிதர்களுக்கு ஒவ்வாமை, தோல் நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
 

கடந்த 2015 ஆண்டு சாதாரண கொசுவலை உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சுரேஷ்குமார் கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.
 

இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி திடீர் என வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் வருமான வரி சோதனை தொடங்கியது. தொழிற்சாலை, அலுவலகம், உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில், 80- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரவு பகலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

KARUR SHOBIKAA IMPEX PRIVATE COMPANY INCOME TAX OFFICERS RAID

சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜாப் வொர்க் பெற்று கொசுவலை தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனங்கள் சிலவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
 

கடந்த சனிக்கிழமை மாலை சிவசாமியின் வீட்டில், அலமாரியில் இருந்து 32 கோடி ரூபாய் ரொக்க பணமும், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் எடுக்கப்பட்டது. 4-வது நாளாக தொடர்ந்த சோதனை, இன்று காலை 10 மணிக்கு நிறைவுக்கு வந்தது. மொத்தம் 60 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 

மத்திய அரசின் மானியத்துடன் கோடிக்கணக்கில் நிதி உதவியுடன் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை சுவற்றில் பதுக்கி வைத்திருந்ததை, எல்லாம் வருமானவரித்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது, மதுரை, சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.