Skip to main content

தோழியிடம் கைவரிசை காட்டிய இளம்பெண்; நூதன முறையில் அரங்கேறிய திருட்டு சம்பவம் 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

karur sellandipalayam young woman mobile and gold chain  incident 

 

இளம்பெண் ஒருவர் தனது தோழியிடம் இருந்து நூதன முறையில் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 27). இவரது கணவர் பழனியப்பன் (வயது 35). இவரது வீட்டுக்கு அருகே கடந்த நான்கு வருடங்களாக கிருத்திகா (வயது 25) என்ற பெண் தனது கணவர் மற்றும் நான்கு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கிருத்திகாவின் கணவர் இறந்த நிலையில், 4 வயது மகனை தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு கிருத்திகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கேரளா சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் மீண்டும் கரூர் வந்த கிருத்திகா, தற்போது இரண்டாவது கணவருடன் தூத்துக்குடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். செல்லாண்டிபாளையத்தில் உள்ள நித்யா வீட்டுக்கு வந்த கிருத்திகா தனது வங்கி ஆவணங்களை தூத்துக்குடி முகவரிக்கு மாற்றுவதற்காக கரூர் வந்ததாகத் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் வந்ததால் அவரை ஓய்வு எடுக்கக் கூறி நித்யா தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து நித்யாவின் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்ற பிறகு மதிய உணவு தானே சமைத்துக் கொடுப்பதாகக் கூறிய கிருத்திகா சாப்பாட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. உணவை சாப்பிட்ட நித்யா மயக்கம் அடைந்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவரது மூன்று பவுன் தங்க சங்கிலி, செல்போன் ஆகியவற்றை கிருத்திகா எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து நித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

 

சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு வருடங்களுக்கு மேலாக தோழியாக பழகி வந்த இளம்பெண் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்