Skip to main content

வாலிபர் மர்ம மரணம்; போலீசார் தீவிர விசாரணை

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

karur kulithaalai man inicdent for well

 

கரூரில் விவசாய பாசன கிணற்றில் வாலிபர் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி பகுதி, தெற்கு மாடு விழுந்தான் பாறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாண்டியன் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி செண்பக ஈஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பல இடங்களில் பாண்டியனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், பாண்டியன் தெற்கு மாடு விழுந்தான் பாறை அருகே மேற்கு பகுதியில் உள்ள விவசாய பாசன கிணற்றில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சடலமாக மிதப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.

 

இந்த சம்பவம் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று மாலை சுமார்  6.30 மணியளவில் உடலில்  காயங்களுடன் சடலத்தை மீட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றிய குளித்தலை போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.