கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்ற நிலையில் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எ.வ.வேலு,சி.வி.கணேசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். சேதமடைந்த வகுப்பறைகள், தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள், சூறையாடப்பட்ட அலுவலக அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். இவர்களுடன் மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமியும், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.