Skip to main content

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; பெண் அரசு ஊழியர் உட்பட மூவர் கைது

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

kallakurichi government job issue action taken by police superdent

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் (வயது 43) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த இருவர் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கொடுத்த புகார் மனுவை உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்.

 

இதையடுத்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் விசாரணை செய்ததில், சீர்காழி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 42) சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவரது மனைவி அஜந்தா(வயது 40) சென்னை எழிலகத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதைப் பயன்படுத்திக் கொண்டு உளுந்தூர்பேட்டை மேற்கு கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளந்தமிழன் (வயது 64) இமயவர்மன் (வயது 34) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை மற்றும் வருவாய்த் துறையில் பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் சுமார் 58 நபர்களிடமிருந்து சுமார் 1 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். மேற்படி மோசடியில் ஈடுபட்ட அஜந்தா, இளந்தமிழன், இமயவர்மன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

"கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்