Skip to main content

முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் கொலை; சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

kallakurichi college student incident minor boy involved

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர், தமிழ்ச்செல்வி தம்பதியர். தமிழ்ச்செல்வி அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவியில் உள்ளார். இவரது மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகன் ஸ்ரீ இரவு அதிக நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. ஜெகன் ஸ்ரீயை பல்வேறு இடங்களுக்கும் உறவினரின் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை ஜெய்சங்கர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 32), அபிலரசன் (வயது 25), ஆகாஷ் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகன் ஸ்ரீயை அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் கொலை செய்து புதைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த கார்த்திகை தீபத்தின் போது ஊரில் திருவிழா நடந்தது. அப்போது ஐயப்பன், ஜெகன் ஸ்ரீ ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகன் ஸ்ரீ ஐயப்பனை பலர் முன்னிலையில் அடித்துள்ளார். தன்னை விட வயதில் சிறியவன் தன்னை பலர் முன்னிலையில் அடித்ததை ஐயப்பன் பெருத்த அவமானமாகக் கருதியுள்ளார். இதற்காக ஜெகன் ஸ்ரீயை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய ஐயப்பன் ஜெகன் ஸ்ரீ மீது விரோதத்தில் இருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, கள்ளக்குறிச்சிக்கு சென்று மது பாட்டில்கள், கொலை செய்வதற்கான கத்தி போன்ற ஆயுதங்களை வாங்கி வந்துள்ளனர்.

 

இதையடுத்து முன்விரோதத்தை வெளிக்காட்டாமல் ஜெகன் ஸ்ரீயை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர். அவரும் பகையை மறந்து அவர்களுடன் காப்புக்காடு வனப்பகுதிக்கு மது குடிக்கச் சென்றுள்ளார். அளவுக்கதிகமான மதுவை ஜெகன் ஸ்ரீயை குடிக்க செய்து அவர் நிலைதடுமாறி தள்ளாடிய நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட நால்வரும் பீர் பாட்டிலால் ஜெகன் ஸ்ரீ தலையில் அடித்தும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். அவர் உடலில் உயிர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதே இடத்தில் குழி தோண்டி உடலை புதைத்தனர். இதை ஐயப்பன் தலைமையிலான நால்வரும் போலீசாரிடம் வாக்குமூலம் ஆக அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர்கள் நால்வரையும் அழைத்துச் சென்று காப்புக்காட்டில் ஜெகன் ஸ்ரீ புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டச் சொல்லி, அந்த இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த வரஞ்சரம் உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகள் நால்வரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். திருவிழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.