![Perundurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/pOLQvXYsdCOXOmh69a-9rMn8OkJLatUTfZ_CCHlQuMQ/1593150296/sites/default/files/2020-06/eps26.jpg)
![Perundurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/M1_MK6Um4kV-CxOgRlLmd2joGgD4F9tEtqWB4tupFoc/1593150296/sites/default/files/2020-06/eps27.jpg)
தமிழகத்தில் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தனக்கு புது புது படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில் அவர் 'இரண்டாவது காலிங்கராயன்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டத்தை அவர் எப்படிப்் பெற்றார் என்பதுதான் இந்தச் செய்தி.
தமிழகத்தில் மேற்கு மண்டலம் என்ற கொங்கு மண்டலத்தில் அவினாசி அத்திக்கடவு திட்டம் என்ற ஒரு நீர்ப்பாசன திட்டத்தைச் சென்ற 2018 இல் முதல்வராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாநில அரசின் நிதியிலிருந்து அந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கினார். அதன்படி அந்தப் பணி தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது. வியாழக்கிழமை மாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் பகுதியில் அந்தப் பணியை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் சில விவசாயிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அதிமுக ஆதரவு நிலையில் உள்ள விவசாய அமைப்பு பிரதிநிதிகள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தத் திட்ட பணிகளைப் பார்வையிட்ட பிறகு விவசாயிகளிடம் பேசுவதாக நிகழ்ச்சி இருந்தது. அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்தப் பகுதியில் முழுக்க குடிநீருக்கும் விவசாயத்திற்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது எனப் பேசினார்.
அதில் பேசிய விவசாயிகளில் ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழ் மட்ட பகுதியிலிருந்து நிலப்பரப்பின் மேல் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்ல முடியும் என நிரூபித்தவர் காலிங்கராயன் என்ற கவுன்டர். அவர் பெயரில்தான் காலிங்கராயன் கால்வாய் உள்ளது. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய நீங்கள் அதேபோல் நில மட்டத்தில் கீழ்ப்பகுதியிலிருந்து மிகவும் உயரமான மேல் பகுதியான திருப்பூர் மாவட்டம் வரை இந்த நீரைக் கொண்டு செல்வது காலிங்கராயன் ஏற்கனவே வகுத்துக் கொடுத்த பாதையில் நீங்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். ஆகவே நீங்கள் தான் 'இரண்டாவது காலிங்கராயன்' எனக் கூறினார்.
அப்போது பலரும் கைதட்டினார்கள். இதைக கேட்ட எடப்பாடி பழனிசாமி முகமலர்ச்சியோடு உங்களின் மரியாதையை ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறி விட்டுச் சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் 'இரண்டாவது காலிங்கராயன்' என்ற பட்டம் வாங்கியுள்ளார்.