Skip to main content

ஊழியர்களின் உறவினர்களுக்கு சொந்தமாகும் கஜா நிவாரண பொருட்கள்: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக ஊழியர்களும், அவர்களின் உறவினர்களும் வண்டி, வண்டியாக எடுத்து சென்றதை கண்ட ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிடங்கு மேலாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 



கடந்த நவம்பர் 15 ம் தேதி யாரும் ஏதிர்பார்த்திடாத வகையில் வீசி, பேரழிவை ஏற்படுத்தியது கஜா புயல். இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் கடலோர தாலுக்காகக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும், வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி மிகவும் கடுமையாக பதித்தது. இதையடுத்து தன்னார்வலர்களும், அரசுகளும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, குடிநீர், மருந்து பொருட்கள், ஆடைகள் என நிவாரணப் பொருட்களை கிடங்குகளில் வைத்து வழங்கினர்.

 

 kaja relief supplies robbery: civilians stopped



இதில் நாகை மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை நாகை வெளிப்பாளையம், பனங்குடி ஆகிய ஊர்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் சேமித்து வைத்து புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு லாரிகள் மூலம் சிறுக,சிறுக அனுப்பி வைத்தனர். ஆனால்  பெரும்பாலான கிராமங்களுக்கு கஜா புயல் நிவாரண பொருட்கள் சென்றுசேரவில்லை என  பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

 

 

 kaja relief supplies robbery: civilians stopped



நாகை, கீழ்வேளூர் ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் வரவில்லை என பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு போஸ்டர்களும் ஒட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். அவ்வப்போது அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும், குடோனில் இருப்பு உள்ளது, கணக்கெடுப்பு நடக்கிறது, முடிந்ததும் கொடுக்கிறோம் என உத்தரவாதம் அளித்தபடியே தப்பித்துவந்தனர்.

 

 



இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பல கிராமங்களில் கஜா புயல் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படாமலேயே நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 25ம் தேதி மாலை வெளிப்பாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் பணிபுரியும், ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பைக்குகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

 kaja relief supplies robbery: civilians stopped

 

இதை அருகில் இருந்த பொதுமக்களுக்கு தெரிந்து, நம்பியார் நகர் மீனவப் பெண்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குக்கு தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் நம்பியார் நகர் மீனவர்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு பொறுப்பாளர்களிடம் கேட்டனர், உயர் அதிகாரிகள் உத்தரவு பேரில்தான் நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும் சேமிப்புக் கிடங்கை காலி செய்ய வேண்டிய உள்ளதாகவும் காலாவதியாகும் பொருட்களை தந்ததாகவும் கூறி சமாளித்துள்ளனர்.

 

kaja



"கஜா புயலால் வீடுவாசல்களையும், வாழ்வாதாரங்களையும் முழுமையாக இழந்த மக்கள் வீதிக்கு வந்து கையேந்தி நின்று பசிக்காக போராடியதை கண்டும் இந்த அரசு திருந்தாமல் உணவுப் பொருட்களிலும் கையை வைத்து விளையாடி வேதனை அளிக்கிறது." என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.