Skip to main content

'இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம்'-மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
'June 4 - the beginning of a new dawn for India' - comments by M.K.Stal

பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தற்போது துவங்கியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு என்பது உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது. பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளபதிவில், 'பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்