Skip to main content

நளினி தாக்கல் செய்த மனு... விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

 Judges who adjourned the hearing in nalini's petition

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன் உள்பட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக செப்டம்பர் 11ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்துவைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கிற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஏழு பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார். எனவே, நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று (29.11.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன், “தமிழக கவர்னரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. நளினியை விடுதலை செய்ய கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை. ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை 39 மாதங்களாக நிலுவையில் உள்ளது” என்று வாதிட்டார். 

 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், “பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது” என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கூடுதல் பதில் மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். தன்னை மூன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிசந்திரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் முடிவைப் பார்த்த பிறகே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதற்கு தமிழ்நாடு அரசு மூன்று வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.