JRC celebrates Children's Day by provided relief

Advertisment

மழைக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் இணை சார் அமைப்பான விழுப்புரம் மாவட்ட ‘ஜூனியர் ரெட் கிராஸ்’ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து மட்டப்பாறை, செ.குன்னத்தூர், காரை ஆகிய மூன்று கிராமங்களிலுள்ள 50 இருளர் குடும்பங்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கே சென்று அரிசி, பிரட் பாக்கெட், போர்வை, துணிகள் ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இந்நிவாரணங்களை முட்டத்தூர் ஒய்க்காப் மேனிலைப் பள்ளி ஆசிரியர் முனைவர். பாபு செல்வதுரை, கல்லப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் இரவீந்திரன், அகரம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் எட்வின், காங்கேயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மரிய ஜோசப், மாம்பழப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர் தன்ராஜ், எம்.ஆர்.ஐ.சி. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்போன்ஸ், வாணியம்பாளையம் ஆனந்தா நடுநிலைப்பள்ளி ஆசிரியை சரசு, ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை மாலினி தேவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மேலும், மழைக்கால நோய்கள் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரிடர் காலங்களில் எப்படி நம்மையும், உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்துகளை மாவட்ட கன்வீனர் எடுத்துக் கூறினார். அத்துடன் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினர். பழங்குடி இருளர் குடும்பத்தினர் ஜே.ஆர்.சி. அமைப்பின் கன்வீனர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.