Skip to main content

ஜோடுகுளி வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்; இளைஞர் போலீசில் சரண் 

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Jodukuli forest;  Youth Police investigation

 

காதல் திருமணம் செய்து கொண்ட மாணவியை இளைஞரே எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜோடுகுளி அருகே வனப்பகுதியில் மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் போலீசாரால் கைப்பற்றப் பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதும், திருமணம் செய்த இளைஞரே பெண்ணைக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ளது ஜோடுகுளி. அங்கு வனத்தை ஒட்டிய பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அந்த பகுதியில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் உடல் ஒன்று கிடப்பது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் இளம் பெண்ணின் சடலத்தின் அருகே இருந்த அவருடைய ஆடைகள், காலணி, தாலிக்கொடி ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்த பெண் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகிலவாணி என்பதும் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் அவர் பாராமெடிக்கல் நான்காவது ஆண்டு படித்ததும் தெரியவந்தது.

 

இந்நிலையில்  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றும் முரளி கிருஷ்ணா (24) சரணடைந்தார். கோகிலவாணியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோகிலவாணி காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. முரளி கிருஷ்ணா தாயாரும், கோகிலவாணியின் சித்தியும் பெங்களூருவில் ஒரே இடத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது கோகிலவாணியை சந்திக்க நேர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரில் இருக்கும் முரளிகிருஷ்ணா அவ்வப்போது சேலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து மனைவியை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் வழக்கம் போல் வந்த முரளி கிருஷ்ணா கோகிலவாணியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது இனிமேல் தன்னை சந்திக்க வர வேண்டாம் என கோகிலவாணி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முரளி கிருஷ்ணா கோகிலவாணியை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்துள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முரளி கிருஷ்ணாவை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்