Skip to main content

ஜோதிகா சொன்னது சரிதான்-உறுதியோடு நிற்கும் சூர்யாவை பாராட்டுகிறேன்-கரூர் எம்பி ஜோதிமணி 

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
Jodhika is right -  Karur MP Jyotimani

 

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தான் புதியதாக நடித்துவரும் திரைப்படம் குறித்து பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் குறித்தும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  அறிக்கை மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், 


அரசு மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் மிகவும் முக்கியம். பல்வேறு அரசு மருத்துவமனைகளில், பள்ளிகள், கல்லூரிகளில் இன்னும்  அடிப்படை வசதிகளே நிறைவடையவில்லை என்பதை என் அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் 90 விழுக்காட்டை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிக்கே ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் அடிப்படை வசதிகள்  நிறைவடையவே  இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
 
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில், அரசு மருத்துவனைகளே உயிர் காக்கும் காவலனாக களத்தில் நிற்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  ஆகவே, ஜோதிகா சொன்னது  சரிதான். வெறும் பேச்சோடில்லாமல் சூர்யா- ஜோதிகாவின்  குடும்பம் சமூக அக்கறையோடு கல்வி சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவை அகரம் பவுண்டேசன் எவ்வித விளம்பரமும் இல்லாமல் செய்து வருகிறது.  

இந்த நேரத்தில் மோடி கோவில்களை விட கழிவறைகள் முக்கியம் என்று சொன்னார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஏன் அன்று யாரும் மோடி மீது பாயவில்லை? சமூக அக்கறைமிக்க  ஜோதிகாவின் கருத்துக்காக ,பிஜேபி /ஆர்எஸ்எஸ் கும்பல் ஒரு பெண், நடிகை என்ற பார்வையில் அறுவெறுக்கத்தக்க வகையில், ஆபாசமாக  விமர்சிக்கின்றனர்.

மாற்றுக் கருத்து இருந்தால் கண்ணியமாக வெளிப்படுத்தலாம். எதற்கிந்த ஆபாசமான, அறுவெறுப்பான விமர்சனங்கள்? இது அவர்களின்  தரத்தைத்தான் காட்டுகிறதே தவிர ஜோதிகாவுக்கு ஒன்றும் இழுக்கில்லை.ஜோதிகாவிற்கு ஆதரவாக உறுதியோடு  நிற்கும் சூர்யாவை மனமார பாராட்டுகிறேன்.

மேலும் காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து, பல நாள் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக, தேசியகொடியை ஏந்தி ஊர்வலம்போன (அதுவும் பிஜேபியின் அமைச்சர் தலைமையில்) பிஜேபி/ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கோவிலை பற்றியோ, ஜோதிகா மற்றும் அவரின் குடும்பத்தை பற்றியோ பேச எவ்வித  அருகதையும் கிடையாது.

உங்கள் ஆபாசத்தையும், அறுவெறுப்பான நடத்தைகளையும் அறிவும், கண்ணியமும், நாகரிகமும் நிறைந்த தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்காது. ஜோதிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்களது அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.