Skip to main content

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஜெயந்த் முரளி நியமனம்! 

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Jayant Murali appointed Director of Corruption Eradication

 

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் தமிழக உள்துறை செயலர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.  

 

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக இருந்த டி.ஜி.பி. விஜயகுமார் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, அந்த பதவியை உடனடியாக நிரப்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பல வழக்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த  வழக்குகள் வேகமெடுக்காமல் விஜயகுமார் பார்த்துக்கொண்டார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. 

 

அதற்கேற்ப, வழக்குகளும் கிடப்பிலேயே கிடந்தன. இந்த நிலையில், விஜயக்குமார் போல டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை புதிய இயக்குநராக நியமிக்கலாமா? என உயரதிகாரிகளிடம் எடப்பாடி ஆலோசித்தபோது, அரசுக்கு சாதகமாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் எந்த ஒரு அதிகாரியும் தென்படவில்லை. இதனால், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்திலுள்ள  அதிகாரிகளின் பட்டியலை ஆராய்ந்து ஜெயந்த் முரளியை தேர்வு செய்திருக்கிறார் எடப்பாடி. அதற்கேற்ப, டிஜிபி அந்தஸ்தில் இருந்த இயக்குநர் பதவியை,  ஏ.டி.ஜி.பி. அந்தஸ்திற்கு தகுதி இறக்கமும் செய்யப்பட்டிருக்கிறது. 

 

ஏற்கனவே இந்த துறையில் இருந்த அனுபவம் ஜெயந்த் முரளிக்கு உண்டு என்கிறார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர். ஜெயந்த் முரளி இதுவரை கவனித்து வந்த சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.பதவியில் அமலாக்கத்துறை ஏ.டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சுகாதார துறையின் முன்னாள் செயலாளர் பீலாராஜேஸின் கணவர்தான் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.

Next Story

முதல்வர் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் வெளியிட்ட எம்.பி.

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Allegation of sensationalism against Chief Minister's wife Published with evidence by M.P

 

அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெளரவ் கோகாய், “உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலமைச்சரின் மனைவியின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு ரூ. 10 கோடி மானியத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கவும்” என்று கூறி மானியம் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ஹிமந்த பிஸ்வா, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.