Skip to main content

“இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார்  உமாபாரதி - எம். எச். ஜவாஹிருல்லா!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Jawahirullah about babri masjid

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம். 


இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள் அறிக்கையில், பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சி.பி.ஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. 

 

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த தீர்ப்பாகவே அமைந்துள்ளது.

 

பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு அத்வானி உள்ளிட்டோர் சதி செய்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து அது இருந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பது பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நீண்ட கால திட்டம். 


பா.ஜ.க.வின் தீர்மானங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கரசேவை செய்வதற்காக 1989 முதல் இந்தியா முழுவதும் ரத்த ஆறுகளை ஒட்டிய ரத யாத்திரைகளை நடத்தியவர் அத்வானி. பாபரி மஸ்ஜித் இடிக்கும் இடத்தில் அத்வானி உள்ளிட்டோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பள்ளிவாசல் இடிப்பு குறித்து விசாரித்த லிபராஹான் ஆணையம் மிகத் தெளிவாக இப்படிக் கூறுகின்றது: “அத்வானி, ஜோஷி, விஜய்ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை பள்ளிவாசல் மேலிருந்து கீழே இறங்கும்படி வேண்டா வெறுப்பாக வேண்டுகோள்களை விடுத்தனர். நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண்துடைப்பிற்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், கரசேவகர்களை பள்ளிவாசலின் புனித இடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்றோ யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது, அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்து விட வேண்டுமென்பதே அவர்களின் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக உள்ளது.” 

 

“இன்னொரு இடி இடித்து விடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்ற உமாபாரதி கத்தியது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாகியது. 

 

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கல்யாண் சிங் அதற்காக உச்சநீதிமன்றத்தால் ஒரு நாள் தண்டனை பெற்றார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த உலக மக்களே இடிப்பிற்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் யார்..? என்பதற்குச் சாட்சியாக உள்ளார்கள். 

 

100க்கும் மேற்பட்ட யுமேடிக் காணொளி ஒலி நாடாக்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியாகப் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் சி.பி.ஐ லக்னோ நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோர் மீது சதி செய்ததற்குச் சான்று இல்லை என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது.

 

நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அவையான உச்சநீதிமன்றமே பாபரி பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் அதற்கு முன்பு அங்குக் கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சொல்லியதுடன், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் அங்கு வழிபாடு நடத்தினார்கள் என்று குறிப்பிட்டது. மேலும், பாபரி பள்ளிவாசல் இடிப்பு நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்பட்ட அக்கிரமம் நிறைந்த அத்துமீறல் என்று குறிப்பிட்டது. 

 

Ad

 

இத்தனையும் தெரிவித்துவிட்டு பாபரி பள்ளிவாசல் இடத்தை எதிர் தரப்பிற்கு அளித்துத் தீர்ப்பு வழங்கியது. நீதி பரிபாலன படித்தரத்தில் கீழ் நிலையில் உள்ள லக்னோ சி.பி.ஐ விசாரணை மன்றம் இதே அடிப்படையில் பாபரி பள்ளிவாசலை இடித்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அத்தகைய தேசத் துரோகிகளை அயோத்திக்கு கரசேவை செய்வதற்குத் தொடர்ந்து அழைப்பு கொடுத்தவர்களை விடுவித்துள்ளது.

 

நமது நாட்டில் நடைபெறும் இந்த அநீதியைக் களைந்து நீதிக்கு உயிர் அளிக்கக் காந்தியடிகள் விரும்பிய இந்தியாவை மீண்டும் கட்டமைக்க விரும்புவோர் ஒன்று சேர்ந்து எல்லா நிலைகளிலும் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள், பேரூர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.